அண்மைக்காலமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் - தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே வார்த்தை மோதல் தொடங்கியுள்ள நிலையில் எலான் மஸ்க் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றிக்கு பக்கத்துணையாக இருந்த தொழிலதிபர் எலான் மஸ்க், அமெரிக்க பாராளுமன்றத்திலும் முக்கிய பங்கு வகித்தார்.
இந்நிலையில் அண்மையில் தனக்கு வழங்கப்பட்ட அரசு பொறுப்புகளில் இருந்து விலகிய எலான் மஸ்க் இனி தனது நிறுவன வளர்ச்சிக்காக மாத்திரம் பணியாற்ற உள்ளதாக தெரிவித்தார்.
ஆனால் பிரச்சினை அதோடு முடியவில்லை. ட்ரம்ப் எப்படி இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என தம்பட்டம் அடித்து வருகிறாரோ, அதுபோன்று ட்ரம்ப்பை தேர்தலில் வெற்றி பெற வைத்ததே நான் தான் என பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் எலான் மஸ்க்.
இது போதாதென்று அமெரிக்காவை உலுக்கிய எப்ஸ்டீன் வழக்கில் (Epstein Files) ட்ரம்ப்க்கும் தொடர்பு உள்ளதாக அவர் வைத்த வெடிகுண்டு தற்போது அமெரிக்க அரசியலை ஆட்டம் காண வைத்துள்ளது.
அமெரிக்க நிதியாளரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவர் சிறார்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கைது செய்யப்பட்டு சிறை சென்றார்.
அங்கு 2019ம் ஆண்டில் எப்ஸ்டீன் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவருக்கு அரசியல் பிரமுகர்கள் பலருடன் தொடர்பு இருந்த நிலையில் இந்த மரணம் மர்மமாக தொடர்கிறது.
இந்நிலையில் தற்போது ட்ரம்ப் மீது புதிய குற்றச்சாட்டை வைத்துள்ள மஸ்க், எப்ஸ்டீன் ஃபைல்ஸில் ஜனாதிபதி ட்ரம்ப்பின் பெயரும் உள்ளதாகவும், அதனால்தான் அதை அவர் வெளியிட மறுத்து வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். இது அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,.